விமான சக்கரத்திலல் ஒளிந்து பயணம் செய்த ஆப்கான் சிறுவன்
காபூலிலிருந்து டெல்லி வரை உயிரைப் பணயம் வைத்து பயணம்
13 வயது சிறுவனை விசாரித்த இந்திய பாதுகாப்பு அதிகாரிகள்
காபூலிலிருந்து டெல்லி வரை 13 வயது ஆப்கான் சிறுவன் ஒருவர் உயிரை பணயம் வைத்து விமானத்தின் சக்கர அறையில் ஒளிந்து பயணம் செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் குந்துஸ் நகரத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவன், காம் ஏர் (Kam Air) நிறுவனத்தின் RQ-4401 பயணிகள் விமானத்தில் காபூலிலிருந்து பயணம் செய்து, செப்டம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணியளவில் டெல்லியில் தரையிறங்கியபோது, விமான நிலையத்தில் தனியாக அலைந்து திரிந்தபோது பாதுகாப்பு பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்திய மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) அதிகாரிகள் சிறுவனை பல மணி நேரங்கள் விசாரித்து, பின்னர் அதே விமானத்தில் மீண்டும் காபூலுக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில் அவர் வெறும் ஆர்வத்திற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறியுள்ளார். மேலும், டெல்லிக்கு வருவதைத் தெரியாமல், ஈரான் செல்லவே விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
விமான சக்கர அறை (Landing Gear Compartment) மிகவும் ஆபத்தான பகுதி என விமான நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அங்கு குறைந்த ஆக்ஸிஜன், கடும் குளிர் நிலை மற்றும் இறங்கும்போது சக்கரம் திறக்கப்படுவதால் கீழே விழும் அபாயம் அதிகம்.
கடந்த காலத்தில் இதுபோன்ற முயற்சிகளில் பலர் உயிரிழந்துள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
சம்பவத்துக்குப் பின் விமானத்தை ஆய்வு செய்தபோது, சிறிய சிவப்பு நிற ஸ்பீக்கர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் முன்னரும் உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்துள்ளன. 2022 ஆம் ஆண்டில், 22 வயது கென்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அம்ஸ்டர்டாமில் தரையிறங்கிய சரக்கு விமானத்தின் சக்கர அறையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|