இந்த வாரத்தின் சிறந்த சமையல் குறிப்பு!
சுவையான மற்றும் எளிய ருசிகரமான சமையல் குறிப்புகள் இந்த வாரத்திற்கு!
கீரைக்கூட்டுக்கு தேங்காய் அரைத்து செய்வதற்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தால் ருசி கூடும்.
பருப்பு அடைக்கு தேங்காய் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கை சேர்த்து அடை சுட்டால் மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
தேங்காய் பர்பி செய்யும் போது 2 டீஸ்பூன் ராகி மால்ட் சேர்த்தால் சுவை கூடும்.
தேங்காயை உடைத்து முதலில் கண் உள்ள பாகத்தை உபயோகிக்க வேண்டும், அந்தப் பகுதி தான் விரைவில் கெட்டுப்போகும்.
பச்சை மிளகாயை நறுக்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை கைகளில் தடவிக்கொண்டால் எரிச்சல் ஏற்படாது.
கோதுமை அல்வா செய்யும் போது நீர்த்து விட்டால் சிறிதளவு சோள மாவை கரைத்துச் சேர்க்கலாம். அல்வா கெட்டிப்படுவதுடன் சுவையும் அதிகரிக்கும்.
பாகற்காய் குழம்பு செய்யும் போது நான்கு துண்டுகள் மாங்காய் சேர்த்தால் கசப்பு தெரியாது.
கேரட் அல்வா செய்யும் போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால் கோவா சேர்த்தால் பிரமாதமான சுவை கிடைக்கும்.
வற்றல் குழம்பு செய்யும் போது கடைசியாக வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டால் குழம்பு ஜோராக இருக்கும்.
தயிர் வடை செய்ய உளுந்துடன் ஐந்தாறு முந்திரிப் பருப்புகளையும் ஊற வைத்து அரைத்தால் வடைகள் மெத்தென்று இருப்பதுடன் ருசியும் அருமையாக இருக்கும்.