குடும்பம்-சமூக இணைப்பால் சுயமரணத்தை தடுப்பது எப்படி?
சுய மரண குறைப்பில் சித்த மருத்துவம்–கவுன்சிலிங் இணைப்பு
குடும்பம், சமூக ஆதரவு, பாரம்பரியமும் நவீனமும் சேர்ந்தால் சுய மரணம் தடுப்பு சாத்தியம் அதிகரிக்கும்..!
உலகளவில் சுயமரணம் ஒரு மிகப்பெரிய பொது சுகாதார சவாலாகக் கருதப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO, 2021) தெரிவித்ததன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 7 லட்சம் பேர் சுயமரணத்தால் உயிரிழக்கிறார்கள்.
குறிப்பாக 15–29 வயதினருக்குள் சுயமரணம், முதன்மை மரணக் காரணிகளில் ஒன்றாக உள்ளது.
இந்த நிலையை மாற்றுவதற்கு உலக சுயமரணத் தடுப்பு நாள் (செப்டம்பர் 10) முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை சித்த மருத்துவம் மற்றும் நவீன உளவியல் கவுன்சிலிங் ஆகியவற்றின் இணைந்த பார்வையில் ஆய்வு செய்வது அவசியமாகிறது.
உயிரிழப்பு என்பது ஒரே காரணத்தால் நிகழ்வதில்லை; மனநலம், சமூக அழுத்தங்கள், குடும்பப் பிரச்சனைகள், பொருளாதார சுமைகள், உடல்நோய்கள், போதைப் பழக்கம், கல்விச்சுமை, தனிமை, சமூக அங்கீகாரம் இல்லாமை போன்ற பல காரணிகளின் கூட்டுச் செயல் ஆகும்.
“எனக்கு வாழ விருப்பமில்லை” போன்ற உரைகள், சமூகத்திலிருந்து விலகுதல், திடீர் கோபம், தூக்கத்தில் மாற்றம், மதிப்புள்ள பொருட்களை பிறருக்கு வழங்குதல் போன்ற அறிகுறிகள் கவனிக்கப்பட வேண்டியவை.
சித்த மருத்துவம் உடல், மனம், ஆன்மா மூன்றையும் சமநிலைப்படுத்தும் மருத்துவமாகும். பிரம்மி, வல்லாரை போன்ற மூலிகைகள் நினைவாற்றலை மேம்படுத்தும்; அஸ்வகந்தா மனஅழுத்தத்தைக் குறைக்கும்; நன்னாரி உடல் சூட்டையும் மனஅழுத்தத்தையும் தணிக்கும். யோகா, பிராணாயாமம், தியானம் ஆகியவை நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்தி எதிர்மறை எண்ணங்களை குறைக்கும். மேலும், சத்துமிக்க உணவுமுறை மூளையின் நலனுக்கு உதவுகிறது.
கவுன்சிலிங்கில் பல்வேறு முறைகள் உண்டு. Cognitive Behavioural Therapy (CBT) எதிர்மறை எண்ணங்களை மாற்ற உதவும்; Crisis Intervention உடனடி பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்கும்; Family Counselling குடும்ப உறவுகளை வலுப்படுத்தி நெருக்கமான ஆதரவுத் தளத்தை உருவாக்கும்; Supportive Counselling உரையாடல் மற்றும் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளும் இடத்தை ஏற்படுத்தும். சமூக அளவில் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, உதவி தேடுவதற்கான பழிக்கேடு (stigma) நீக்கப்பட வேண்டும்.
சித்த மருத்துவமும் நவீன உளவியல் வழிகாட்டலும் ஒன்றிணையும் போது மனமும் உடலும் ஆரோக்கியமாகி, நீண்டநாள் வாழ்வதற்கான வலிமையை அளிக்கும்.
மூலிகைச் சிகிச்சை, யோகா, உணவுமுறை மாற்றங்கள், அவசர நிலையிலான உளவியல் ஆதரவு, சமூக விழிப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்தால், நமது சமூகத்திற்கு ஏற்ற, முழுமையான உயிர் பாதுகாப்பு மாதிரி உருவாகும்.
சுயமரணம் தடுப்பு என்பது மருத்துவர், உளவியல் நிபுணர் பொறுப்பு மட்டுமல்லாது, குடும்பம், சமூக அமைப்புகள், அரசு அனைத்தும் இணைந்து செய்ய வேண்டிய பணியாகும். பாரம்பரிய சிகிச்சையும், நவீன உளவியல் முறைகளும் இணைந்து செயல்பட்டால், எங்கள் சமூகத்திற்கு ஏற்ற, பயனுள்ள, முழுமையான சுயமரண தடுப்பு மாதிரி உருவாகும். வாழ்க்கை ஒரு அரிய வரம். அதை மதித்து காப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|