கணவரின் சொத்தில் இரண்டாவது மனைவிக்கு உரிமை உள்ளதா?
சொத்து உரிமை: இரண்டாவது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் சட்டத்தின் பதில்
கணவரின் மரணத்திற்குப் பிறகு சொத்து பிரிவில் இரண்டாவது குடும்பத்தின் நிலை
இந்தியாவில் இரண்டாவது மனைவியின் சட்டபூர்வ உரிமைகள் குறித்து பலருக்கும் குழப்பம் உள்ளது. குறிப்பாக, கணவர் சொத்துகளில் அவருக்கும், அவரின் குழந்தைகளுக்கும் பங்கு உண்டா? இல்லையா? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
இதற்கான விளக்கம் 1955ம் ஆண்டு இந்து திருமணச் சட்டம் மற்றும் 1956ம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம் மூலம் கிடைக்கிறது.
இரண்டாவது திருமணம் எப்போது செல்லுபடியாகும்?
1. முதல் மனைவி இறந்தால், அல்லது
2. சட்டப்படி விவாகரத்து பெற்ற பிறகு, அல்லது
3. நீதிமன்றம் முதல் திருமணத்தை செல்லாது என்று அறிவித்தால் மட்டுமே,
இரண்டாவது திருமணம் சட்டபூர்வமாக செல்லுபடியாகும்.
அதே சமயம், விவாகரத்து இல்லாமல், உயிருடன் இருக்கும் முதல் மனைவியை விட்டு மறுமணம் செய்வது சட்டப்படி செல்லாது.
இரண்டாவது மனைவியின் சொத்துரிமை
திருமணம் சட்டபூர்வமானால் – முதல் மனைவியைப் போலவே, கணவர் சொத்தில் உரிமை உண்டு.
திருமணம் செல்லாததாக இருந்தால் – கணவர் சொத்தில் பங்கு கிடையாது. ஆனால், பராமரிப்பு (Maintenance) கோர உரிமை உண்டு.
இரண்டாவது மனைவியின் குழந்தைகளின் உரிமை
இரண்டாவது திருமணம் செல்லுபடியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்த குழந்தைகள் சட்டபூர்வ குழந்தைகளாக கருதப்படுகிறார்கள்.
இதனால், தந்தையின் சொத்தில் முதல் மனைவியின் குழந்தைகளைப் போலவே சம உரிமை உண்டு.
ஆனால், இரண்டாவது திருமணத்திற்கு முன்பு பிறந்த அந்த பெண்மணியின் குழந்தைகளுக்கு, கணவரின் சொத்தில் உரிமை இல்லை.
சொத்து பகிர்வு எப்படி நடக்கும்?
கணவர் உயில் (Will) எழுதாமல் இறந்தால், அவரது சொத்து மனைவி (திருமணம் செல்லுபடியாக இருந்தால்), குழந்தைகள், தாயார் ஆகியோருக்கு சமமாகப் பிரிக்கப்படும்.
விவாகரத்து நடந்திருந்தால், முதல் மனைவிக்கு சொத்தில் பங்கு இல்லை.
ஆனால், நீதிமன்றம் வழங்கும் ஜீவனாம்சம் (Alimony) மட்டும் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|