1 பில்லியன் அபராதம் - நிராகரித்த சிங்கப்பூர் நிறுவனம்
சுற்றுச்சூழல் சேதத்திற்காக இலங்கை விதித்த அபராதத்தை செலுத்த மறுப்பு
"இது உலக கப்பல் துறைக்கு ஆபத்தான முன்னுதாரணம்" – X-Press Feeders CEO
இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பில், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட X-Press Feeders நிறுவனம் மீது இலங்கை நீதிமன்றம் விதித்த 1 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதத்தை நிறுவனம் நிராகரித்துள்ளது.
இன்று (23) அளித்த பிரத்தியேக பேட்டியில், X-Press Feeders நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷ்முவேல் யோஸ்கோவிட்ஸ், “இந்த அபராதத்தை செலுத்துவது உலகளாவிய கப்பல் துறைக்கு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இது எதிர்காலத்தில் ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கும்” எனக் கூறினார்.
குறிப்பாக, 2021 ஜூன் மாதத்தில் கொழும்புத் துறைமுகம் அருகே தீ விபத்துக்குள்ளான MV X-Press Pearl கப்பல், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு, X-Press Feeders நிறுவனத்தால் இயக்கப்பட்டது.
அந்நேரத்தில் நைட்ரிக் அமில கசிவு காரணமாக கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்ந்து இரண்டு வாரங்கள் எரிந்தது.
அதன் பின்னர் கப்பல் கடலில் மூழ்கியதில் இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
இந்தச் சம்பவத்துக்காக இலங்கை நீதிமன்றம் 1 பில்லியன் டாலர் இழப்பீட்டை விதித்திருந்தாலும், X-Press Feeders நிறுவனம் அதை ஏற்க மறுத்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் விவாதங்கள் கிளம்பும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|